சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாஜக நிர்வாகி ஷாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க, மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜக நிர்வாகி ஷா 15 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், மதுரை மாநகர் கிரைம் பிராஞ்ச் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், எம்எஸ். ஷா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாக இருந்த ஷாவை இன்று கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எம்.எஸ்.ஷாவை வரும் 27ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.