ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவல் நேற்று முன்தினம் முடிவடைந்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். ஜாமின் தொடர்பாக விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்றும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி கூறினார்.
இதனைத்தொடர்ந்து ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று மனுத்தாகல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார்.
இந்நிலையில், ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஜாமின் முறையீட்டுக்காக செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு விரைந்துள்ளனர்.