செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து தொரப்பட்ட வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்மையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார். அவர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருவதாகவும், அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளதாகவும், அமைச்சராக தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் எழுதிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள போதும், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க அதிகாரமில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக நீடிப்பதால் மனுதாரர் எந்தவிதத்தில் பாதிக்கப்படுகிறார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை அடுத் வாரத்திற்கு தள்ளி வைத்தனர். செந்தில் பாலாஜி தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன் உள்ளிட்ட மூவர் தொடர்ந்த மனுக்களும் அடுத்த வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.