ஊழல் புகார்களை கூறும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாரா என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சியில்தான் அதிக அளவில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறினார். மரபு சாரா எரிசக்தி மூலம் தமிழ் நாட்டில் கூடுதலாக 357 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகவும், இது ஒரு மாபெரும் சாதனை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார், ஏழை மக்களை பாதிக்காத வகையிலேயே தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் அவர் விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவதாகக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அதே நேரம் பாஜக ஆளுநம் மாநிலங்களான கர்நாடகாவில் 100 யூனிட் மின்சாரத்திற்கு 592 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், உத்தரபிரதேசம், குஜராத்தில் 100 யூனிட்டுக்கு 515 ருபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறினார்.
தமிழ்நாடு அரசுதான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மின்சார சேவையை வழங்கி வருவதாகக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதாகவும் கூறினார்.
ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுத்தக்கட்டமாக வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாகக் கூறினார். சூரிய மின்சக்தி பூங்கா விரைவில் திருவாரூரில் அமைக்கப்பட உள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த செந்தில் பாலாஜி, தைரியமும் நேர்மையும் இருந்தால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அண்ணாமலை வழக்கு தொடரட்டும் என்று சவால் விடுத்தார். அந்த வழக்கை தாம் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஊடகத்தில் தன் முகத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து இது போன்ற பொய் புகார்களை தெரிவிப்பதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.








