ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுட்டுக்கொலை!

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தது. தற்போது இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கடந்த 1985-ம் ஆண்டு 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து ஏதென்ஸ் நோக்கி சென்ற விமானத்தை கடத்தி, அதில் ஒரு அமெரிக்கரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த ஷேக் ஹமாதி, தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஷேக் ஹமாதி மீது 6 தோட்டாக்கள் பாய்ந்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை குடும்ப பிரச்னை காரணமாக நடந்துள்ளதாக அந்நாட்டு  ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.