இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி – இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு!

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 133 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானதில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். பென் டக்கெட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களை அடுத்து கேப்டன் ஜாஸ் பட்லர் களமிறங்கினார். நிலைத்து ஆடிய அவர் அரை சதம் கடந்தார். இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.

அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 68 ரன்களும், ஹாரி புரூக் 17 ரன்களும் எடுத்தனர். இவர்களை தவிர ஜாக்கோப் பெத்தேல் (7), ஜேமி ஓவர்டன்(2), கஸ் அட்கின்சன்(2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.