ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாகப்
பார்க்கக் கூடாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வரும் தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தற்போது உள்ள சூழலில் தொழில் துறையில் வளர்ச்சி அடைய நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்துரையாடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், முந்தைய காலங்களில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் நமக்கு கிடைக்கும். ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசியை நாம் ஏற்றுமதி செய்தோம். அரசு, ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர் என அனைவரும் ஒன்றாக செயல்பட்டதே இதற்கு காரணம். அதேபோல, 40 மில்லியன் முகமூடிகள், PPE கிட்டுகள் தேவைப்பட்டன. கொரோனா
பிரச்சினை துவங்கிய 60 நாட்களில் இந்தப் பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு
அனுப்பும் அளவிற்கு நாம் வளர்ந்து உள்ளோம். இன்றைய தேதியில் புதுமையை உருவாக்குவது மிகவும் தேவையான ஒன்று. சிறிய கண்டுபிடிப்புகள் கூட மனிதனின் பணம், வாழ்க்கை, ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது என்று பேசினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திறமையாளர்களை இன்னும் திறமையானவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் இந்த நிகழ்வின் நோக்கம்.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் தாமாக வளர்ந்து இன்று குடியரசுத் தலைவராக மாறியுள்ளார். யார் வேண்டுமென்றாலும் குடியரசுத் தலைவர் ஆகலாம் என்பது அனைவருக்கும் புத்துணர்ச்சியைத் தரும். திரௌபதி முர்மு தேர்வு என்பதை வாக்கு வங்கியாகப் பார்க்கக் கூடாது. அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தின் வெளிப்பாடாகப் பார்க்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையை அனைத்துப் பள்ளிகளிலும் கற்றுத் தர வேண்டும்.
அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் சமூக வலைதளங்களின்
தாக்கத்தினால் பல்வேறு சிந்தனைக்கு ஆளாகிறார்கள். எனவே, பாடத்தை தாண்டி
ஆசிரியர்கள் மாணவர்கள் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து
பள்ளிகளிலும் மனநல மருத்துவர் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா