“தமிழ்நாட்டு மீனவர்களையும் இந்திய மீனவர்களாக பாருங்கள்” – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டு மீனவர்களையும் இந்திய மீனவர்களாக பாருங்கள் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடையில் பேசியதாவது,

“திமுக ஆட்சியில் நாகை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. வேதாரண்யம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பணி நடைபெறுகிறது. நாகையில் 13 பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் ரூ.250 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

நாகையில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாகையில் புதுமைப்பெண் திட்டம் மூலம் 7,469 மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் 31,953 பேருக்கு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் 3656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கச்சத்தீவு தீவு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். கச்சத்தீவில் மீன்பிடிக்க வழிவகை செய்யும் விதத்தில் இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் தேவை.

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. 2010க்கு பிறகு இலங்கை – இந்தியா இடையிலான மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாடு முன்னேறி இருப்பதற்கு காரணம் இருமொழி கொள்கைதான் என மத்திய அரசுக்கு தெரியும். வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.