மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையை தேடும் பணி 5வது நாளாக நீடிக்கிறது.
மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி, செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்தபோது, கடந்த 3-ம் தேதி அப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து என்ற காட்சி சென்சார் கேமராவில் பதிவானது. அதன் அடிப்படையில் சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று இரவு ஆரோக்கியநாதபுரம், மயிலாடுதுறை ரயில்வே நிலையம், அசிக்காடு, மறையூர், கோவங்குடி, ஊர்க்குடி ஆகிய ஆறு இடங்களில் ஏழு கூண்டுகள் வைக்கப்பட்டு, சிறுத்தையைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், எந்தக் கூண்டிலும் சிறுத்தை இதுவரை சிக்காத நிலையில், மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ரயில்வே தண்டவாளம் பாலம் கீழே சிறுத்தையின் நடமாடிய தடங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, கால் தடங்கள் எதுவும் தெளிவாகக் கிடைக்காத நிலையில், காவிரி ஆற்றில் முடியுடன் கூட மலத்தை வனத்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அதனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக தீவிரமாக தேடியும், வனத்துறையின் எந்தக் கூண்டிலும் சிறுத்தை இன்னும் சிக்காததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.