அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13ஆயிரத்து 331 ஆசிரியர் காலிப் பணியிடங்களில்
தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13ஆயிரத்து 331 காலிப் பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனடிப்படையில், தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்
பணியிடங்கள் 7500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்
5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை
மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும் அதேபோல இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில்
தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
-மணிகண்டன்