சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைவழக்கு – ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற
மதுரை அமர்வில் மனு தாக்கல்…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்கிஸ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு, ஜூன் 19ம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

9 பேர் மீதும் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தனக்கு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு உள்ளது. எனவே ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.