சசிகலா வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீதான மானநஷ்ட வழக்கை ரத்து செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கை மாறியதாகவும் அதில் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவுக்கு தொடர்பு இருப்பதாகவும் அப்போதைய சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா 2017ம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டிஐஜி ரூபா கூறிய குற்றச்சாட்டை மறுத்த சத்யநாராயணா ராவ் 2018ம் ஆண்டு பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ரூபா மீது 20 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உரிய விளக்கம் அளிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் தன் மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஐபிஎஸ் அதிகாரியான தன்மீது அரசு அதிகாரி மானநஷ்ட வழக்கு தொடர முடியாது என்றும், மானநஷ்ட வழக்கு சம்பவம் நடந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே தொடர வேண்டும் என்றும், ஆனால் இது காலம் தாழ்த்தி தொடரப்பட்ட வழக்கு என்பதால் தனக்கு வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்து தன்மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎஸ் அதிகாரி ரூபா மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் ஐபிஎஸ் அதிகாரி மீது மற்றொரு அதிகாரி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வது மானநஷ்டமாகாது என்றும், ஐபிஎஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்த அரசிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், மானநஷ்ட வழக்கு தொடர்பாக கீழ் நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு அனுப்பிய சம்மன் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே கீழ் நீதிமன்றத்தில் நடைபெறும் மானநஷ்ட வழக்கை ரத்து செய்தும், ரூபாவுக்கு அளிக்கப்பட்ட சம்மனை ரத்து செய்தும் உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பளித்தார்.