இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஆர்யா, துஷ்ரா விஜயன், பசுபதி, ஜான், விஜய், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரைக்கு இசையமைத்திருந்தார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் ஆர்யா உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ”மேட்ச் பார்க்க ரெடியா? ரோஷமான ஆங்கில குத்துச் சண்டை ரவுண்டு 2” என்று பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக சார்பட்டா திரைப்பட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.







