சர்க்கார் பட விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் தமிழக அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அரசின் திட்டங்களை தவறாக சித்தரித்துள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேவராஜன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சூட்டிகாட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.







