சங்கர்ராமன் கொலை வழக்கு – மாவட்ட நீதிபதியின் பணிநீக்கத்தை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

சங்கர்ராமன் கொலை வழக்கு விவகாரத்தில் மாவட்ட நீதிபதியை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சங்கர்ராமன் கொலை…

சங்கர்ராமன் கொலை வழக்கு விவகாரத்தில் மாவட்ட நீதிபதியை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி
சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம்  பவானியில் உள்ள 5வது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ராஜசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரிவு அதிகாரி மற்றும் சங்கராச்சாரியாருக்கு வேண்டப்பட்ட கவுரி காமாட்சி ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசியதாக புகார் கூறப்பட்டது.

இதுசம்பந்தமாக உயர் நீதிமன்றம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை, காவல் துறை அதிகாரி நடத்திய உண்மை கண்டறியும் விசாரணை அடிப்படையில் ராஜசேகரனுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் நடத்திய இந்த விசாரணையின் அடிப்படையில் ராஜசேகரனை பணிநீக்கம் செய்து 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் நீதிபதி ராஜசேகரன் தாக்கல் செய்த வழக்கை
விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, நீதிபதிகள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும். இந்த வழக்கில் முன்னாள் நீதிபதி ராஜசேகரனின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன எனக் கூறி, நீதிபதி ராஜசேகரனின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.