ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வரும் சானியா மிர்சா, இந்த போட்டியுடன் தான் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட் சலாம் பட்டங்களை வென்ற சானியா மிர்சா, குழந்தை பிறப்புக்கு பிறகு ,2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் விளையாடத் தொடங்கினார் . 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்ட சானியா மிர்சா மற்றும் உக்ரையின் நாட்டைச் சேர்ந்த நாடியா கிச்நோக் தோல்வியை தழுவினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்சா ‘இனி நான் விளையாடப்போவதில்லை. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. காயத்திலிருந்து முன்பைப்போல் மீண்டு வர எனது உடல் ஒத்துழைக்கவில்லை. எனது உடல் அதன் வலுவை இழக்க தொடங்கியிருக்கிறது.
நான் எங்கு சென்றாலும் எனது மூன்று வயது மகனை உடன் அழைத்து செல்வதன் மூலம் அவனின் உடல் நிலை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். இந்த சீசன் முடியும் வரை நான் விளையாடுவேன். கடின உழைப்பால் எனது உடல் எடையை குறைத்து, இளம்தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறேன்.”என்று அவர் கூறினார்.