இந்திய அரசியல் சாசனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து, கேரள அமைச்சர் சாஜி செரியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநில அமைச்சர் சாஜி செரியன், அழகான அரசியல் சாசனத்தை நாம் கொண்டிருக்கிறோம் என அடிக்கடி கூறுகிறோம் ஆனால், பிரிட்டிஷ் முறையை கண்மூடித்தனமாக நகலெடுத்து உருவாக்கப்பட்டதுதான் நமது அரசியல் சாசனம் என விமர்சித்தார்.
இந்த அரசியல் சாசனம் சுரண்டலுக்கு எதிராக எந்த பாதுகாப்பையும் வழங்காது என்றும், சாமானிய மக்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் கொள்ளையடிக்கவே உதவக்கூடியது என்றும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், இத்தகைய அரசியல் சாசனத்தைத்தான் நாம் கடந்த 75 ஆண்டுகளாக பெருமையுடன் பின்பற்றி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரது இந்த பேச்சு கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தை சாஜி செரியன் அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், அவர் அமைச்சராக நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன், அமைச்சர் சஜி செரியன் அரசியல் சாசனத்தை அவமதித்துவிட்டதாகவும், இது தேச விரோதம் என்றும் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் சாஜி செரியன் வாய் தவறி இவ்வாறு பேசிவிட்டதாக கூற முடியாது என தெரிவித்துள்ள வி. முரளீதரன், நமது நாட்டின் அரசியல் சாசனம் குறித்து இடதுசாரிகளின் கொண்டுள்ள கருத்தின் தொடர்ச்சிதான் இது என்றும் விமர்சித்திருந்தார்.
அமைச்சரின் பேச்சு குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கோரியதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் சாஜி செரியனுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.
தனது பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்த சாஜி செரியன், தனது கருத்து திரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முடிவின் காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்திற்கு தான் ஒருபோதும் களங்கம் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ள சாஜி செரியன், தனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு ஊடகங்கள் தனக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது சிபிஎம் கட்சியையும் இடது முன்னணியையும் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.











