#SabarmatiExpress ரயில் தடம் புரண்டு விபத்து! சதிவேலை காரணமா?

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதமோ, யாருக்கும் எந்த காயமோ…

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதமோ, யாருக்கும் எந்த காயமோ ஏற்படவில்லை.

விபத்து குறித்து வடக்கு மத்திய ரயில்வேயின் (என்சிஆர்) மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி சஷிகாந்த் திரிபாதி கூறியதாவது:

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று (17.08.2024) அதிகாலை 2 மணியளவில் கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதமோ, யாருக்கும் எந்த காயமோ,பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றார்.

மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. “தண்டவாளத்தில் கிடந்த பாராங்கல்லின் மீது மோதியதால் விபத்து நிகழ்ந்ததாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ” ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

விபத்து குறித்து பயணி விகாஸ் என்பவர் தெரிவிக்கையில், “வாரணாசியில் இருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் அகமதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். ரயில் கான்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், ஒரு பெரிய சத்தம் கேட்டது, ரயில் பெட்டிகள் குலுங்கத் தொடங்கியது. நான் மிகவும் பயந்துவிட்டேன், ஆனால் ரயில் நின்றுவிட்டது.” ரயில் பெட்டிகள் தடம் புரண்டபோது ரயில் மிகக் குறைந்த வேகத்தில் சென்றதாகவும், ரயில் நின்றதால், பயணிகள் தங்கள் பெட்டிகளில் இருந்து பத்திரமாக வெளியேறத் தொடங்கினர் என அவர் தெரிவித்தார். “சம்பவம் நடந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். அருகிலுள்ள ரயில் பாதையின் ஓரத்தில் எங்களது உடைமைகளுடன் நாங்கள் காத்திருந்தோம்” என்று மற்றொரு பயணி கூறினார்.

உத்தரப்பிரதேச நிவாரண ஆணையர் ஜி.எஸ்.நவீன் குமார் கூறுகையில், “பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மேலும் பயணிகள் அனைவரும் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று கூறினார். சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் அந்த பகுதியில் செல்லும் ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் மூன்று ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் இருந்து கான்பூர் ரயில் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவைத்தவிர, எட்டு பெட்டிகள் கொண்ட மெமு ரயில் கான்பூரில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு பயணிகளை கான்பூருக்கு கொண்டு செல்வதற்காக புறப்பட்டுள்ளது, இதனால் அவர்களை அந்தந்த இடங்களுக்கு அனுப்ப கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.