சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபருக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்துள்ளதால், அவர் தென் ஆப்பிரிக்க பயணத்தை தவிர்த்துவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில், அது தொடர்பாக புதின் விளக்கமளித்துள்ளார்.
உக்ரைன் நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான சிறுவர்களை ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக கடத்தி சென்றதாக நெதர்லாந்தின் செயல்பட்டு வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 17-ம் தேதி அறிவித்தது. இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின், அந்த நாட்டின் குழந்தைகள் நல ஆணையர் மரியா லவாவோ-பெலோவா ஆகிய இருவரும் போர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. அவா்களுக்கு எதிராக கைது உத்தரவையும் பிறப்பித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாடு வரும் ஆகஸ்ட் 22 முதல் 24-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவின் ஜோஹனஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்றாகும்.
எனவே ரஷ்ய அதிபர் புதின் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றால் அவர் நெதர்லாந்த் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனால் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யா சார்பில் அதிபர் புதினுக்கு பதிலாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் கைது அச்சத்தால் தென் ஆப்பிரிக்க பயணத்தை புதின் ரத்து செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த புதின் இது தொடர்பாக கூறியதாவது:
”இப்போதைய சூழ்நிலையில் மாநாட்டுக்கு சென்று பங்கேற்பதைவிட, ரஷ்யாவில் இருப்பது தான் முக்கியமானது. இந்த மாநாட்டில் விடியோ கான்பரன்சிங் மூலம் ரஷ்யாவில் இருந்தபடி பங்கேற்பேன். ரஷ்யா சார்பில் அமைச்சர் லாவ்ரோவ் மாநாட்டில் பங்கேற்பார் என்றார்.
பிரிக்ஸ் கூட்டணியை மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் அணியாக ரஷ்யா முன்னெடுத்தது. ஆனால், இந்த முறை புதின் நேரில் பங்கேற்காதது ரஷ்யாவின் முயற்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.