31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு நடத்திய காவலரின் மனநலம் குறித்த அறிக்கையை திரும்ப பெற்ற ரயில்வே!

ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பணியில் இருந்த ஆர்பிஎப் காவலர் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் ரயில்வே விளக்கம் அளித்து நேற்று வெளியிட்ட அறிக்கையை சில மணி நேரங்களிலேயே திரும்ப பெற்றுக்கொண்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில், பால்கர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் சேத்தன் சிங் தான் கையில் வைத்திருந்த ஏகே 47 துப்பாக்கியால் தனது உயர் அதிகாரியான டீகாராம் மீனா மற்றும் 48 வயதான அப்துல் காதிா்பாய் முகமது ஹுசேன் பான்பூா்வாலா, அக்தா் அப்பாஸ் அலி, சதா் முகமது உசேன் ஆகிய 3 பயணிகள் மீதும் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் ஒருவர் மற்றும் 3 பயணிகள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓடும் ரயிலில் பாதுகாப்புப்படை காவலர் சேத்தன் சிங் நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு அங்கிருந்த சக ரயில் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்ததோடு, டஹிசர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, ரயிலில் இருந்து தப்பித்துச் செல்ல இறங்கிய சேத்தன் சிங், ரயிலை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். சேத்தன் சிங், தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ரயில் நிற்காமல் இருந்திருந்தால், சேத்தன் சிங் மேலும் பலரைக் கொன்றிருக்கலாம் என்று ரயில்வே பாதுகாப்பு போலீசார் கருதுகின்றனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து அறிந்த போரிவலி அரசு ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தப்பியோடிய காவலர் சேத்தன் சிங்கை பின் தொடர்ந்து சென்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடா்பாக போரிவலி ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தில் தொடா்புடைய காவலா் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் இந்திய ரயில்வே பாதுகாப்பு போலீசார் புதன்கிழமை அறிக்கை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் ‘ரயில்வே பாதுகாப்புப் படை காவலா்களுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவலர் சேத்தன் சிங்கின் கடைசி மருத்துவப் பரிசோதனையில் மனநலப் பாதிப்பு ஏதும் இருந்ததாக கண்டறியப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. அப்படி ஏதாவது வியாதிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால், அதை ரயில்வேயிடம் இருந்து அவர் அதனை மறைத்துவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், உரிய விளக்கம் ஏதுமின்றி சில மணி நேரங்களில் அந்த அறிக்கை திரும்ப பெறப்படுவதாக ரயில்வே செய்தி தொடா்பாளா் அறிவித்தாா். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஏடிஜி ஆர்பிஎஃப் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading