தீயினால் சுட்ட புண் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி எல்லோருடனும் அன்பான வார்த்தையில் பேச வேண்டும் என சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கேட்டுக்கொண்டார்.
சென்னை மூலக்கடை அருகே உள்ள பொன்னியம்மன்மேடில் உள்ள நவசக்தி கடம்பாடி சின்னம்மன் ஆலயத்தில் ஆர்.எஸ். எஸ் அமைப்பு சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தில் வழிபாடு நடத்திய மோகன் பாகவத் பொங்கல் பானைக்கும் சூரியனுக்கும் தீபாராதனை காட்டினர். கோயிலின் உள் நடந்த கோ பூஜையிலும் கலந்து கொண்ட அவர், சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்கள் முன் உரையாற்றிய அவர், தமிழகத்தில் மட்டுமே 3 தினங்கள் பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்றார். சூரியனுக்காக முதல்நாள் பொங்கல் வைப்பது போற்றுதலுக்கு உரிய விஷயம் என்றும், அதன் பின் விவசாயிகளுக்கு உதவி செய்யும் கால்நடைகளுக்கு வழிபாடு, காணும் பொங்கலின் போது நம் உறவினர்களை கண்டு மகிழ்கிறோம் என்றார்.
அந்த தினத்தில் நமக்கு உதவி செய்பவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறிய அவர், முடி திருத்துபவர், துணி துவைப்பவர் என அனைவருடனும் நட்பு பாராட்ட வேண்டும் என்றார். சர்க்கரை பொங்கலை போல இனிய சொற்களை நாம் பேச வேண்டும் என்று கூறிய மோகன் பாகவத் நாம் பேசும் வார்த்தைகளால் சண்டைகள் வராமல் இருக்க, தீயினால் சுட்டப்புண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற திருக்குறளை கூறி, அந்த குறளை உணர்ந்து வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.







