கேரளாவில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கொச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து, சோதனை செய்தனர்.
அப்போது ஜிம்பாவே நாட்டில் இருந்து கத்தார் வழியாக கொச்சி வந்த பாலக்காட்டை சேர்ந்த முரளிதரன் என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளித்தார்.
பின்னர் அவரை முழுவதுமாக சோதனை செய்ததில் அவர் கொண்டு வந்த சூட்கேசில் 30 கிலோ போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முரளிதரனிடமிருந்து போதைப்பொருளை கைப்பற்றிய அதிகாரிகள் இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, முரளிதரனை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ போதைப்பொருளின் மதிப்பு 60 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







