வங்கிகளில் கடன் அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரத்தை திரும்ப தராவிட்டால் தினமும் ரூ.5,000 அபராதம் – ரிசர்வ் வங்கி அதிரடி!

வாடிக்கையாளர் கடனை முழுமையாக அடைத்த 30 நாள்களில் அவரது சொத்துப் பத்திரம், ஆவணங்களைத் திருப்பி அளித்துவிட வேண்டும் எனவும், தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 தாமதக் கட்டணமாக வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய…

வாடிக்கையாளர் கடனை முழுமையாக அடைத்த 30 நாள்களில் அவரது சொத்துப் பத்திரம், ஆவணங்களைத் திருப்பி அளித்துவிட வேண்டும் எனவும், தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 தாமதக் கட்டணமாக வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆா்பிஐ) உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக வங்கிகளில் கடன் வாங்கி வீடு, நிலம், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்குவோர் அல்லது வேறு தனிநபர் பிரச்னைகளுக்காக கடன் வாங்குபவர்கள் தங்களது சொத்துப் பத்திரத்தை வங்கிகள் அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் வைத்துக் கொள்வது வழக்கமாகும்.

ஆனால் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு அந்த சொத்துப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பி அளிப்பது, கடனில் இருந்து மீட்டுவிட்டதற்கான தடையில்லாச் சான்று பெறுவது, அடமானப் பத்திரத்தை ரத்து செய்வது போன்றவற்றை வழங்குவதற்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக காலம் எடுத்துக் கொள்வதாக புகார்கள் எழுந்துவருகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளர் ஒருவர் கடனை முழுமையாக அடைத்த 30 நாள்களுக்கு அவரிடம் இருந்து அடமானமாகப் பெற்ற சொத்துப் பத்திரங்களை திருப்பி அளித்துவிட வேண்டும். மேலும், அந்த சொத்து தொடர்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.இதைச் செய்யாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தினசரி ரூ.5,000 தாமதக் கட்டணமாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர் கடன் பெற்ற குறிப்பிட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் கிளையில் மட்டும் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறாமல், அவர் விரும்பும் கிளை மூலம் ஆவணங்களைத் திருப்பி அளிக்கவும் வசதி செய்து தர வேண்டும்.

இது தொடர்பான விவரங்களைக் கடன் பெறும்போது அளிக்கும் கடிதத்திலேயே வங்கிகள் தெளிவாகக் கூறிவிட வேண்டும். கடன் பெற்றவர் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும். இது தொடா்பான நடைமுறைகளையும் முன்னதாகவே வாடிக்கையாளருக்கு கூறிவிட வேண்டும். எதிா்பாராதவிதமாக சொத்து ஆவணங்கள் சேதமடைதல், தொலைந்துபோவது போன்ற நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கிகள், அந்த வாடிக்கையாளா் மாற்று ஆவணம் பெறுவதற்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும். இதற்கு 60 நாள்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.