போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்காக ரூ.17.15 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14…

தமிழ்நாடு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு 1.70 கோடி பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.

கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியான பேருந்து சேவைகளுக்காக, பேருந்துகளை இயக்கின. அப்போது. போக்குவரத்துப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காலத்திற்கு பின், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு. 14 வது ஊதிய ஒப்பந்தத்தை 01-09-2019 முதல் அமல்படுத்தி, ஊதிய உயர்வு அளித்து, அதன்படி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.