கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணையை அக்டோபா் 10-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் கூகுள் குரோம், யூடியூப் போன்ற தனக்குச் சொந்தமான செயலிகளை கட்டாயமாக நிறுவி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்கள் இதனால் வேறு வழியின்றி, கூகுள் நிறுவன செயலிகளையே பெரும்பான்மையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கூகுளின் போட்டி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ அமைப்பு ரூ.1337.76 கோடி அபாரதம் விதிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியப் தொழிற்போட்டி ஆணையமான சிசிஐ அமைப்பு விதித்த இந்த அபராதத்தை எதிர்த்து கூகுள் நிறுவனம் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், அப்போது சிசிஐ விதித்த அபராதத் தொகையில் 10%மட்டும் கூகுள் நிறுவனம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் மூன்றாம் தரப்பு செயலி மையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற சிசிஐ-யின் சில உத்தரவுகளை என்சிஎல்ஏடி ரத்து செய்தது.
இதையும் ஏற்காத கூகுள் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதே வேளையில், மூன்றாம் தரப்பு செயலி மையங்களுக்கு கூகுள் அனுமதி அளிக்கத் தேவையில்லை என்ற என்சிஎல்ஏடி-யின் உத்தரவுக்கு எதிராக சிசிஐ சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று அந்த மனுக்களைத் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தை விரிவாக விசாரிப்பதற்கு கூடுதல் காலஅவகாசம் தேவைப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனா். அதற்கு மனுதாரா் தரப்பு மூத்த வழக்குரைஞரான ஹரீஷ் சால்வேவும் ஒப்புதல் தெரிவித்தாா்.
இருதரப்பும் தங்களது கோரிக்கைகள் குறித்த முழு விவரங்களையும் அக்டோபா் 7-ம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபா் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனா். இந்த வழக்கில் இருதரப்பும் தாக்கல் செய்யும் அறிக்கைகளைக் கொண்டு பொதுவான மனுவைத் தயாரிப்பதற்காக வழக்குரைஞா் சமீா் பன்சாலையும் நீதிபதிகள் நியமித்தனா்.