கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 இனி மாதந்தோறும் 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வான அனைத்து மகளிருக்கும் ரூ.1000 சென்றடைந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், வங்கிகளில் 1ம் தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனை நடப்பதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படாவண்ணம் மாதந்தோறும் 15-ந் தேதி வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.







