கடவுளை வழிபடுவது தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இரு தரப்பினர் பிரச்னை காரணமாக திருமங்கலம், மேலநேரி கிராமத்தில் 12
ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கோயிலை மீண்டும் திறப்பது குறித்து இந்து சமய
அறநிலையத் துறை இணை ஆணையர், அனைத்து தரப்பு மக்களிடம் விசாரணை நடத்தி 6
மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
12 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மேலநேரி கிராமத்தில் அருள்மிகு வாலகுருநாதசுவாமி
திருக்கோயிலைத் திறப்பதாக சிறப்பு அலுவலர் வெளியிட்ட நோட்டீஸுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கோயிலை திறப்பதற்காக சிறப்பு அலுவலர் பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்து
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சீனி, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேலநேரி கிராமத்தில்
வாலகுருநாதசுவாமி திருக்கோயிலில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால்
இந்த கோவில் கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அனைத்து தரப்புனரிடமும் சுமூக உறவு எட்டப்படாத நிலையில், கோவில்
திறக்கப்பட உள்ளது என சிறப்பு அலுவலர் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேலநேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு
வாலகுருநாதசுவாமி திருக்கோயிலில் சிலையை கோயிலில் வைத்திருப்பது தொடர்பாக,
இரு பிரிவினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் சிவில் வழக்குகள்
காரணமாக கோயில் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குகள் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
கோயிலும் மூடப்பட்டு உள்ளது. 2011ஆம் ஆண்டிலேயே, இந்த கோவில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தகுதியான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டாலும், கடந்த 12 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாமல் இருந்தது.
தற்போது திடீரென கோயில் திறக்கப்படும் என நோட்டீஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களுக்கு இடையேயான தகராறு காரணமாக கோயிலை மூடுவதன் மூலம் கடவுளை வணங்குவதை நிறுத்த முடியாது. கடந்த 2011ம் ஆண்டிலேயே தகுதியான நபரை அற நிலையத் துறை நியமித்த போதும் கோயிலை
கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மனுதாரர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது என்று கூறினாலும் கூட, அந்த
கோயிலை தனிப்பட்ட கோயிலாக அறிவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் நிர்வாகத்தில் பிரச்னை இல்லை.
இவ்வாறு இருக்கும் போது, அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட அலுவலர், திடீரென
கோயிலை திறக்க உள்ளோம் என வெளியிடப்பட்ட நோட்டீஸ் முற்றிலும் சட்டத்திற்கு
உட்பட்டது அல்ல. கோயிலை திறப்பதற்காக சிறப்பு அலுவலர் பிறப்பித்த நோட்டீஸ் ரத்து
செய்ப்படுகிறது.
கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி
உள்ள உரிமை. எனவே, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, 6 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.








