ஆண்கள் செய்யும் தவறுகளுக்குப் பெண்களை குற்றம் சாட்டுவதா? என்று பிரபல நடிகை சாடியுள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்தது, அதற்காக ஷாட்ஷாட்ஸ் என்ற செயலியை உருவாக்கியதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவின் மைத்துனர் பிரதீப் பக்ஷிதான் அந்த ஆப் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொண்டார் என்றும் இதற்கும் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பில்லை, அவர் அப்பாவி என்றும் ஷில்பா தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் இணைய தளங்களிலும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஷில்பா ஷெட்டி வழக்குத் தொடுத்துள்ளார். இதையடுத்து இந்திப் பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹன்சல் மேத்தா, ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், ’ஷில்பாவுக்கு ஆதரவாக நிற்காவிட்டால் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவரை தனியாக விட்டுவிடுங்கள். சட்டம் முடிவு செய்யட்டும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், நீதி வழங்கப்படுவதற்கு முன்பே குற்றவாளியாக அறிவிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது’ என்று கூறியுள்ளார்.
இதை டேக் செய்துள்ள நடிகை ரிச்சா சதா, ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்லும் தேசிய ஆட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி வழக்குத் தொடுத்திருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். நடிகை ரிச்சா சதா, ஷகிலாவின் பயோபிக் உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.








