சென்னை குரோம்பேட்டையில் அரிசிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குரோம்பேட்டை, சேம்பர்ஸ் காலனி தெருவில் ஆனந்த்ராஜ் என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். குரோம்பேட்டை சிஎல்சி சாலையில் ஆனந்தராஜ் அரிசி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை வழக்கம்போல ஆனந்தராஜ் கடையை திறக்க சென்றபோது அங்கு வந்த சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆனந்தராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தாக்குதலினால் ஆனந்த்ராஜ் உயிருக்கு போராடியுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் ஆனந்தராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே ஆனந்தராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மாமூல் கேட்டு ஆனந்தராஜிடம் தகராறு செய்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக குரோம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித், சதீஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.