பாதுகாப்பு காரணங்களால் மருத்துவமனை அறையிலிருந்து சிசிடிவி கேமிராக்கள் அகற்றப்பட்டுள்ளது என அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு விசாரணைக்காக ஆஜராவதிலிருந்து தங்கள் மருத்துவர்களுக்கு விலக்கு கோரியும், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரியும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, “ஒருதலைபட்சமாக ஆறுமுகசாமி ஆணையம் நடந்துகொள்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் நிலையில் எங்களது மருத்துவர்களையே மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்றனர். ஆணையத்தில் நாங்கள் கொடுக்கும் தகவல்களையெல்லாம் வேண்டுமென்றே ஆறுமுகசாமி ஆணையம் கசியவிடுகின்றனர்.
இதனால் எங்கள் நற்பெயர் கெட்டுப்போகிறது. இதனால் இதை தடுக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடக்கூடிய உரிமை எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில்தான் ஆணையம் முன்பு ஆஜராக முடியாது என தெரிவிக்கிறோம். அதிகார வரம்பை மீறி ஆறுமுகசாமி ஆணையம் நடந்துகொள்கிறது. நிறைய உத்தரவுகளை போடுகிறார்கள்.” என ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் முறையிட்டார்.
விசாரணை ஆணையத்தை கலைக்க மருத்துவமனை நிர்வாகம் கோருகிறதா என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, “நாங்கள் ஆணையத்தை கலைக்க கோரவில்லை. ஆனால் ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறவில்லை, அப்படி இருக்க மருத்துவ ரீதியிலான அறிக்கைகள் அடங்கிய விவரங்களை எந்த அடிப்படையில் அவர்கள் ஆய்வு செய்து தெரிவிப்பார்கள்.
சிகிச்சை அளித்தது தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்ய நிபுணர்களால்தான் முடியும், எனவே வல்லுநர்கள் அடங்கிய குழுவை நிமிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்.” மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
அதேபோல மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஏன் அகற்றப்பட்டது என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவுக்கு பிரைவசி முக்கியம் எனவே சி.சி.டி.வி.க்களை அகற்ற வேண்டும் என அரசு கூறியதை ஏற்றுதான் சிசிடிவி.க்களை அகற்றினோம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டதையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.