டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து, பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகளை நீக்கிய முடிவை, திரும்ப பெற வேண்டும் என்று கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் உட்பட ஆயிரம் பேர் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின், பி.ஏ. ஆங்கிலப் படிப்புக்கான பாடத் திட்டத்தில் பெண் எழுத்தாளர்கள் மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளின் ஆங்கில மொழியாக்கம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், பாடத் திட்டத்தில் இருந்து இவர்களின் படைப்புகளை நீக்க, சமீபத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜாதி ரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் கூறி வந்தனர். ஆனால் அதை பல்கலை மறுத்திருந்தது. இந்நிலையில் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து டெல்லி பல்கலைக் கழகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், பாமா, சுகிர்தராணி இருவரும் சமகால தமிழ் எழுத்தாளர்கள். அவர்களின் படைப் புகளையும் மகாஸ்வேதா தேவி படைப்புகளையும் விலக்குவது அப்பட்டமான சாதி, மத ரீதியிலான நடவடிக்கையே. எந்தவித காரணமும் இல்லாமல் அவர்களின் படைப்புகளை நீக்குவதும் தவிர்ப்பதும் அரசியலில் அரிய உதாரணமாகிவிடும். அரசியலில் பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் தலை நகரில் உள்ள பல்கலையில் அவர்களின் படைப்புகள் இடம்பெறுவதும் கற்பிப்பதும் முக்கியம். மற்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ள ஒடுக்கப் பட்டுள்ள சமூகத்தினரின் அவலநிலையைக் குறிப்பிடும் இந்த படைப்புகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், பிரபல எழுத்தாளர்கள் அருந்ததி ராய், விக்ரம் சந்திரா, நடிகைகள் ஷர்மிளா தாகூர், ஷபானா ஆஸ்மி, இயக்குநர்கள் அடூர் கோபால கிருஷ்ணன், ஆனந்த் பட்வர்தன் உள்பட பலர் கையெழுத்திட்டுள்ளனர்.