வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து வருவதால் அதை எதிர்கொள்ள தயராக இருப்பதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வடகிழக்கு பருவமழை காலமாக இருப்பதால் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் உபகரணங்களுடன் முழு வீச்சில் 24X7 செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது.
மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் சிக்குண்ட நபர்களை பாதுகாப்பாக மீட்க இரப்பர் படகுகள் மற்றும் மோட்டர் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரினை வெளியேற்ற நீர் இறைக்கும் பம்புகள் (Supra jet pump), Generators, Inflatable emergency light மற்றும் மீட்புப்பணிக்கான கயிறுகள், லைப் பாய், லைப் ஜக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரர்கள் கொண்ட Swimmers Rescue Team மற்றும் கயிறு மூலம் மீட்புப்பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற Rope Rescue Team என இரு கமாண்டோ படைகள் பேரிடரை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை அடையாளம் காட்டும் கருவிகள் (Victim Location Unit), ரோப் லான்சர், ரோப் ரைடர் (Rope Launcher and Rope Rider) மற்றும் தெர்மல் இமேஜிங் கேமிரா (Thermal Imaging Camera) ஆகியவை தயார் நிலையில் உள்ளது.
வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு தகவல்தொடர்பு சாதனங்களான வாக்கி டாக்கி (Walkie Talkiel, Wireless போன்றன தயார் நிலையில் உள்ளது.
தாழ்வான பகுதிகள், வெள்ளநீர் சூழும் குடியிருப்பு பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளக்காலங்களில் பிற அரசு துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்புப்பணி மேற்கொள்ளப்படும்.
மேலும், வானிலை ஆய்வு மையத்தின் தகவல் பெற்று அன்றாட வானிலை நிலவரத்திற்கேற்ப மீட்புப்பணிக்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் தன்னார்வலர்களை கொண்ட தீயணைப்பு மீட்பு குழுவினர் 8462 நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பேரிடர் காலங்கள் மற்றும் தீவிபத்து மற்றும் மீட்புப்பணி அழைப்புகளில் பயன்படுத்தத்தக்க வகையில் தயார் நிலையில் உள்ளனர்.” என தெரிவித்துள்ளது.
மேலும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டுப்பாட்டு அறை 101, 112, மற்றும் தீ செயலி (THEE APP).
மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறை – 1070 & 9445869843 .
மருதம் கட்டுப்பாட்டு அறை – 044-24331074 & 24343662