தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக கழகத்தின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், BA., போட்டியிடுவார் என்று தலைமை கழகத்தின் சார்பாக கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக தம்பிதுரை, காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக், பாமக அன்புமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.







