’அண்ணாத்த’ என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு படம் என்று நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்த அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்தப் படம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுபற்றி ஹூட் செயலியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:
’பேட்ட’ படம் முடிந்திருந்தது. படம் ரொம்ப பிடிச்சிருந்தது. அதற்கு முன்னால காலா, கபாலில எல்லாம் வயசான கேரக்டர் பண்ணியிருந்தேன். ’பேட்ட’ படத்துல கார்த்திக் சுப்புராஜ் என்னை ஸ்டைலா காண்பிச்சிருந்தார். அந்தப் ரிலீஸ் அண்ணிக்கு சிவா டைரக்ஷன்ல, அஜித் ஆக்ட் பண்ணின, ’விஸ்வாசம்’ படமும் ரிலீஸ். ரெண்டு படமும் சூப்பர் ஹிட். ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு. பிறகு ’விஸ்வாசம்’ படத்தைப் பார்த்தேன். படம் நல்லா இருந்தது. இடைவேளை முடிஞ்சது, பெரிய சூப்பர் ஹிட் ஆகறதுக்கு இதுல என்ன இருக்குன்னு நினைச்சுட்டே இருக்கும்போதே.. கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க, படத்தோட கலரே மாறி சூப்பரா இருந்தது. கிளைமாக்ஸ்லாம் எக்ஸலண்டா இருந்தது. எனக்குத் தெரியாமலேயே கைதட்டிட்டேன்.
உடனே இயக்குநர் சிவா சாரை பார்க்கணும்னு சொன்னேன். அவங்க வீட்டுக்கு வந்தாங்க. சந்திச்சேன். வாழ்த்து சொன்னேன். அவர் அவ்வளவு பெரிய உடம்பை வச்சுட்டு, குழந்தை மாதிரி பேசினார். அவர் வார்த்தையில உண்மை இருந்தது. பிடிச்சுப் போச்சு. அப்ப, எனக்கு ஏதும் கதை வச்சிருக்கீங்களா, படம் பண்ணலாமான்னு கேட்டேன். பெரிய ஹிட் கொடுக்கணும்னு சொன்னேன். ’உங்களுக்கு ஹிட் கொடுக்கறது ரொம்ப ஈசி’ன்னு சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாரும் அப்படி சொன்னதே இல்லை. ’பண்ணிடலாம் சார்’ன்னுதான் சொல்வாங்க. இப்படி யாரும் சொன்னதே இல்லை.
எப்படி அவ்வளவு கான்பிடன்டா சொல்றீங்க?ன்னு கேட்டேன். ’ரெண்டு விஷயம் சார், நல்ல கதைகள்ல நீங்க இருக்கணும்னு சார், தளபதி, முத்து, அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா.. இதெல்லாம் நல்ல கதைகள், அதுல நீங்க இருந்தீங்க, அதனாலதான் சூப்பர் ஹிட்’னு சொன்னார். ரெண்டாவது என்னன்னு கேட்டேன். நீங்க கிராமத்து கேரக்டர் பண்ணி ரொம்ப நாளாச்சுன்னு சொன்னார். வில்லேஜ் கேரக்டர், நல்ல கதை இருந்தா போதும்னு சொன்னார். சரி ஒரு கதை கொண்டாங்கன்னு சொன்னேன். 15 நாள் ஆகும்னு சொன்னார். பிறகு கதையோட வந்தார்.
3 பாட்டில் தண்ணி வேணும்னு கேட்டார். கொஞ்சம் கொஞ்சமா குடிச்சுட்டு சொல்ல ஆரம்பிச்சார். தண்ணினா சாதாரண தண்ணிதான், நீங்க வேற எதையும் நினைச்சுடாதீங்க. கதையை சொல்ல சொல்ல, கிளைமாக்ஸ் வரும்போது, எனக்குத் தெரியாமலே என் கண்ணுல கண்ணீர் வந்தது. பிறகு அவர் கைய பிடிச்சுட்டு, சூப்பர், சொன்ன மாதிரியே படம் எடுக்கணும்னு சொன்னேன். இதை விட சூப்பரா எடுப்பேன்னு சொன்னார். எல்லாரும் கூட்டம் கூட்டமா வந்து பார்ப்பாங்க சார்ன்னு சொன்னார்.
சொன்ன மாதிரியே, சொல்லியடிச்சிருக்கார். அண்ணாத்த மாபெரும் வெற்றி. இந்தப் படம் பண்ணும்போது நிறைய பிரச்னைகள் வந்தது, அதை சிரிச்சுட்டே சன் பிக்சர்ஸோடை சேர்ந்து சமாளிச்சு, அவர் கொடுத்த ஒத்துழைப்பு இது பெரிய வெற்றி ஆகறதுக்கு காரணம். சிவா மற்றும் டீம், கலாநிதிமாறன், சன் பிக்சர்ஸ் டீமுக்கு என் வாழ்த்துகளை தெரிவிச்சிக்கிறேன். ’அண்ணாத்த’ என் வாழ்க்கையில மறக்க முடியாத படம்.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.