நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாகப் பேசுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், பிரதமர் வேண்டுகோளை ஏற்று 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடி பறக்க விடப்படும் எனக் கூறினார். மேலும், மதுரைக்குக் காந்தியடிகள் வந்த பின் தான் மகாத்மா காந்தி என அழைக்கப்பட்டார் எனத் தெரிவித்த அவர், ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாகப் பேசுவார் எனக் கூறினார்.
மேலும், ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் எனச் சொல்லி விட்டார் எனத் தெரிவித்த அவர், மக்கள் திமுக அரசு மீது கொதிப்பு அடைந்து உள்ளதாகக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் என்ன சொல்லி வாக்கு கேட்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை எனக் கூறிய அவர், திமுக அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தவில்லை எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘உலக அளவிலான காவல்துறை விளையாட்டுப் போட்டியில் 4 தங்கம் வென்ற சென்னை போலீஸ்!’
முதியோர் உதவித் தொகை தங்கு தடையின்றி கிடைக்க முதலமைச்சர் கருணையோடு செயல்பட வேண்டும் எனக் கூறிய அவர், டி.டி.வி தினகரன் அவருடைய கருத்தைச் சொல்லி உள்ளார். டி.டி.வி தினகரன் பேச்சை நாங்கள் பெரிசாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அதிமுகவின் ஒரே நோக்கம் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்குவது மட்டுமே எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சசிகலா பேச்சுக்கு நாங்கள் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை. அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக மட்டுமே, மற்றவர்களை நாங்கள் பொறுப்படுத்துவதில்லை. அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. ஒரு சிலர் அதிமுகவிலிருந்து செல்வதால் அதிமுகவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை எனக் கூறினார்.
மேலும், மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழல் நடந்து உள்ளதாக நிதியமைச்சர் குற்றச்சாட்டை முன் வைக்கிறார் எனக் குறிப்பிட்ட அவர், நிதியமைச்சர் சொல்லும் குற்றச்சாடை நிரூபிக்க வேண்டும். கமிஷனுக்காக நிதியமைச்சர் எங்கள் மீது குற்றச்சாட்டைச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை எனக் கூறினார்.








