ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வசூல்வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு புறம் நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் மேற்கொண்டுள்ள ஆன்மீகப்பயணம் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
தமிழ் திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த நடித்து வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்தின் போதும் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
பாபா படம் வெளியானதிலிருந்து ஆண்டுதோறும் பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த், கொரானா பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலை செல்வதை தவிர்ந்திருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜெயிலர் திரைப்படம் வெளியான அன்று ரிஷிகேஷில் இருந்த ரஜினிகாந்த், முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள தனது நண்பர்கள் மூலம் திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தெரிந்துகொண்டு உற்சாகமாகியுள்ளார். படத்தின் வெற்றிக்கும், இமயமலை பயணத்துக்கும் பெரும் தொடர்பு இருப்பதாக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். ஆகஸ்ட் 15 அன்று துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம சுவாமிகளுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
இமயமலை பயணத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அழைத்துச் செல்லாமல், தன் நண்பர்கள் மூவரை மட்டும் ரஜினி அழைத்துச் சென்றுள்ளார் ரஜினி. நண்பர்களுடன் சேர்ந்து சாலையோர கடைகளில் உணவு அருந்துவதோடு அங்குள்ள மக்களோடு மக்களாக இயல்பான பயணத்தையும் ரஜினி மேற்கொண்டு வருகிறார். நடிகர் ரஜினிகாந்த உண்ட உணவுக்கு அங்கிருக்கும் கடைக்காரர்கள் பணம் வாங்க மறுக்கும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் இமயமலையில் நடைபெற்றுள்ளது.
சிரஞ்சீவி வியாசர் அவதரித்த “ஆடி”மாதத்தில் அவரின் இருப்பிடத்திற்கே சென்று அவரை ரஜினிகாந்த் வணங்கினார். ரிஷிகேஷ், பத்ரிநாத் பயணத்தை முடித்த ரஜினி அடுத்ததாக இமயமலையில் பாபாஜி பக்தர்களுக்காக துவாராக பகுதியில் தான் நிறுவியிருக்கும் ஆசிரமத்தில் ஓய்வெடுத்தார். பின்னர் பாபாஜி குகைக்கு சென்று அங்கு சிறிது தியானமும் மேற்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினி உற்சாகமாக இமயமலையில் வலம் வரும் புகைப்படங்கள் சமூகவலைதங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
– விக்னேஷ் , நியூஸ் 7 தமிழ்