பள்ளிக் மாணவர்களுக்கான ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, அவர் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்‘ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூருக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று, மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுக்கும் அவர், மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு சென்றடைகிறார். அங்கு அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.