தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை – தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்…

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

சென்னை வானிலையிலிருந்து விலகிச் செல்ல வேண்டிய நேரம்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 

ஒவ்வொரு முறையும் மழை அறிவிப்பு வெளியிடப்படும் போது, அது உளவியல்ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். சாதாரண மழைக்கு அச்சமடைய வேண்டாம்.
அடுத்த 2 வாரங்களில் சென்னையைத் தாக்க எந்தப் புயலும் வராது.

இதையும் படியுங்கள் : மிசோரம் முதல்வராக லால்துஹோமா பதவியேற்பு!

சென்னை நகரைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க மழையானது டிசம்பர் 2024 க்கு இடையில் இருக்கலாம். எனினும், அதனை உறுதிப்படுத்த இன்னும் அதிக நேரம் உள்ளது. இப்போதைய நிலையில், நிவாரணப் பணிகள்தான் முக்கியம், மழையோ, புயல் வதந்தியோ அல்ல. அரபிக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 2 நாள்களில் தமிழ்நாட்டின்  பிற பகுதிகளில் மழை பெய்யும்.

அரபிக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்.

இதேபோல்,  இதர உள்ள மாவட்டங்களாக திருச்சி, பெரம்பலூர், கரூர், டெல்டா பகுதிகள் உள்ளிட்டவையும் நல்ல மழையைப் பெறும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், வடக்கு உள்மாவட்டங்களைத் தவிர்த்து பிற அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும்.கேரள எல்லைப் பகுதிகளில்  உள்ள மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, கொடைக்கானல், குன்னூர், ஈரோடு, கோவை மற்றும் திருப்பூரின் ஒரு சில பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யும். கேரளத்திலும் நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.