உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் என வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மலைப் பிரதேச மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் பனெட் என்ற கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாம்பா மாவட்டம் மட்டுமின்றி, கங்கரா, பிலாஸ்பூர், சீர்மோர், மாண்டி, சோலன் ஆகிய மாவட்டங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
கங்கரா மாவட்டத்தில் உள்ள பழமைமான பாலமான சாக்கி பாலம் கனமழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது.
சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 5ல் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை பட்டுள்ளது.
இதேபோல், மாண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளதா மாவட்ட ஆட்சியர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக குலு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
உத்தரகாண்ட்டில் தமசா ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக அருகில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட்டில் எங்கெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதோ அங்கெல்லாம் மீட்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.119.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 34 மாவட்டங்களில் மொத்தம் 180 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், 19 பேர் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
வெள்ள பாதிப்பு குறித்து மதிப்பிடப்பட்டு வருவதாகவும், விரைவில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது கனமழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. எனினும், நிலைமை தற்போது மேம்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.