தமிழ்நாடு கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் எனக்கூறினார். மேலும், வடகிழக்கு பருவமழை பற்றிய அறிவிப்பு இரண்டு அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும் என குறிப்பிட்ட அவர், வடகிழக்கு பருவமழை தொடங்க 10 நாட்கள் மேலாகும் என்றும், அக்டோபர் மாதத்தில் தற்போது வரை 5 சென்டிமீட்டர் அளவே மழை பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.







