சென்னையில் மழை பாதிப்புகளை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், சைதாப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக, வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தபடி செல்கின்றனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் மழை பாதிப்புகளை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மீட்பு பணிகளுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் அவர்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.