#Madhyapradesh பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் மத்திய, மாநில அரசுகள் வெட்கப்பட வேண்டும் – ராகுல்காந்தி கண்டனம்!

மத்தியப்பிரதேச பாலியல் வன்கொடுமை விவகாரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தும் அளவுக்கு உள்ளது என எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் ஜாம் கேட் பகுதியருகே சோட்டி ஜாம் என்ற இடத்தில்…

Rahul Gandhi's strong words as 2 Army officers assaulted,

மத்தியப்பிரதேச பாலியல் வன்கொடுமை விவகாரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தும் அளவுக்கு உள்ளது என எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் ஜாம் கேட் பகுதியருகே சோட்டி ஜாம் என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி பயிற்சி பெறும் மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு அருகே ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 2 இளம் ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர். அவர்களுடன் 2 இளம்பெண்களும் சென்றுள்ளனர். அப்போது, 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை மறித்தது. அந்த கும்பல் கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் தடிகளை வைத்திருந்தனர். கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த அவர்கள், பயிற்சி அதிகாரிகளையும், பெண்களையும் கடுமையாக தாக்கினர்.

அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பிற பொருட்களை அந்த கும்பல் கொள்ளையடித்தது. இந்நிலையில், ராணுவ வீரர் மற்றும் பெண் ஒருவரை பணய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு, மற்ற 2 பேரையும் ரூ.10 லட்சம் பணம் கொண்டு வரும்படி கூறி அனுப்பினர். இதனால் அச்சமடைந்த அந்த அதிகாரி உடனடியாக திரும்பி, உயரதிகாரியிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசாரும், ராணுவத்தினரும் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

இதையும் படியுங்கள் : “தமிழ் திரை உலகில் பாலியல் புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை” – அமைச்சர் #Saminathan!

போலீசார் வருவது பற்றி தெரிந்ததும், அந்த கும்பல் தப்பி சென்றது. இதன்பின், தாக்கப்பட்ட 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், 2 ராணுவ அதிகாரிகளும் காயமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெண்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவத்தில், புதிய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது :

“மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அவர்களது பெண் தோழிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தும் அளவுக்கு உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் , ஒழுங்கு என்பது இல்லை. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் தான் இதற்கு காரணமாகும். சமூகமும் அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும், தீவிரமாக சிந்திக்க வேண்டும்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.