மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி கோரிக்கை..

நாடாளுமன்றத்தின் நடப்பு மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ்…

நாடாளுமன்றத்தின் நடப்பு மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக, அவர்மீது குஜராத் பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். இதற்கிடையே, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

உச்சநீதிமன்றம் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே. மிஷ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை கடந்த மாதம் 21-ம் தேதி விசாரித்தது. ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை ஆகஸ்டு 4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், அவதூறு வழக்கில் தாம் குற்றவாளி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், அதை முன்னதாகவே செய்திருப்பேன் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, தம் மீதான தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், மக்களவையின் தற்போதைய அமர்வுகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.