திருச்சி மாவட்டத்தில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பேருந்து வசதி இல்லாததால், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடந்து சென்று படித்து வருவதாகவும், பேருந்து வசதி வேண்டியும் 11 வயது மாணவர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள சோபனாபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள ஒசரப்பள்ளியை சேர்ந்த தம்பதியினர் ஜெயராஜ் மற்றும் மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது 11 வயது இளைய மகன் ஹரிஹரன் சோபனாபுரத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி கேட்டு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் தங்கள் ஊரில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அனைவரும் விவசாய கூலி வேலை செய்து வருவதாகவும், இவர்களது குழந்தைகள் சோபனாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருவதாகவும், தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் பகுதிக்கு இதுவரை பேருந்து வசதி இல்லாத காரணத்தால் தன்னை போன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் இரண்டு கிலோமீட்டர் தொலைவு காலை மாலை என இரு வேலையும் நடந்த சென்று படித்து வருவதாக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் எழுதியுள்ளார்.
நாங்கள் தினமும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு சென்று படித்து வருவதாகவும், மாலை நேரத்தில் நடந்து வருவதால் களைப்பாகி விடுவதாக தெரிவித்துள்ளார். எனவே தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என கடிதத்தில் ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் ஹரிஹரன் 11 வயதிலேயே சமூக ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாக பாராட்டி உள்ளனர்.







