” ராகுல் காந்தி இந்தியாவின் எதிரிகள் போன்று பேசி வருகிறார் “ என ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 10 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாடிய அவர், மக்களோடு நேரடியாக அரசியல் குறித்து உரையாடுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டதால்தான் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
தமது நடைபயணத்திற்கு நாட்டு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடத்ததாக கூறிய அவர் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத மோடி அரசு, மக்களை திசைதிருப்ப செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்ததாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் அமெரிக்க பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா தெரிவித்ததாவது..
“ ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியது ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பேசுவது போல் இல்லை. இந்தியாவின் எதிரிகள் பேசுவது போன்று உள்ளது. எதிரிகள்தான் இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு இதுபோன்ற கருத்துகளை கூறுவார்கள். இதனையே தற்போது ராகுல் காந்தி செய்து வருகிறார். ராகுல் காந்தியில் இந்த நாடகத்தை இந்தியா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த செயல்களுக்கான விலையினை அவர் கொடுக்க வேண்டியிருக்கும்.” என ரவீந்தர் ரெய்னா தெரிவித்தார்.







