வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில், புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை ட்ரவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வரச் செய்து, ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூரில் அமைந்துள்ள கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் நிறுவப்பட்டு இருக்கும் கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை, கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், ”மாணவர்கள் தங்கும் விடுதியில், புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளைக் களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்தனர்” என்று எழுதப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டுள்ளது. எவ்வாறு தாங்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டோம் என்பதை பாதிக்கப்பட்ட மாணவர்களே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், மாணவர்கள் அரை ட்ரவுசரில் கல்லூரி தங்கும் விடுதியை சுற்றி வருவதும், அவர்கள் மீது தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ, ட்விட்டரில் பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் அக்கவுண்டுகளுக்கும் டேக் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து டெல்லியில் இருக்கும் ராகிங் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்திருப்பதாக, தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர் கார்த்திக்கும் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உரிய நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில், முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், 7 மாணவர்களை சந்தேகத்தின் பேரில் இடைநீக்கம் செய்துள்ளதாக சிஎம்சி கல்லூரியின் முதல்வர் சாலமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது என்று முதல்வர் சாலமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை ட்ரவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.