புதுச்சேரி மாநிலத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான முழுமையான நிதி நிலை அறிக்கையைச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி மாநிலத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான ரூபாய் 10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால் குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும், உர விற்பனை அதிகரிக்கக் காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும், கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு, இளைஞர் நலன் துறை தனியாகத் துவங்கப்படும் என அறிவித்தார். 
இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும், அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் பொலிவுறு வகுப்புகளாக மாற்றப்படும், தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் தேசிய சட்டப்பல்கலைக்கழகம் துவங்கப்பட உள்ளது என்றும் இதற்கான துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்
எனதெரிவித்த அவர், 12.5 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தி நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மரச்செக்கு எண்ணெய் தயாரித்து அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும், காலியாக உள்ள 50 தீயணைப்பு வீரர்கள் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்த அவர், தீயணைப்புத் துறைக்கு 31.05 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், புதுச்சேரியில் நிரந்தர தீயணைப்பு பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,
புதுச்சேரியில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் மீன் ஏலக்கூடம் உருவாக்கப்படும்,
காரைக்கால் முகத்துவாரத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரி மாநிலத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மிதக்கும் படகுத் துறைகள் அழைக்கப்படும், என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். 
எந்தவிதமான அரசு உதவி தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயது வரை வறுமை
கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்
உதவித்தொகை வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்,
காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும், காரைக்காலில் ரூ.80 கோடியில் புதிய அரசு பொது மருத்துவமனை கட்டப்படும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள ஆவணங்கள், சொத்துக்களை டிஜிட்டல் மயமாக்கி பாதுகாக்கப்படும், புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.1 கோடி வழங்கி வந்த நிலையில் அதை ரூ.2 கோடி வரை உயர்த்தப்படும், புதுச்சேரி காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.








