இந்தியாவின் ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பி.டி. உஷா இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் தலைவராவார்.
இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் வருகிற டிசம்பர் 10-ந்தேதி நடக்கிறது. இவற்றில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக இந்தியாவின் தங்க மங்கை என போற்றப்படும் கேரளாவை சேர்ந்த பி.டி. உஷா தெரிவித்தார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில், சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.
தலைவர் பதவிக்கு அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் சின்ஹா குறிப்பிட்டு உள்ளார். வேறு எந்த பதவிகளுக்கும் யாரும் நியமனம் செய்யப்படவில்லை என்றும் சின்ஹா கூறினார். இதனால், போட்டியின்றி தலைவர் பதவிக்கு பி.டி. உஷா தேர்வாகும் நிலை காணப்பட்டது.
இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என மத்திய சட்ட மற்றும் நீதி துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், கவுரவமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நமது நாட்டின் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்களால் நாடு பெருமை அடைகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
பி.டி. உஷா இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் தலைவராவார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 தங்கம் உள்பட 11 பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.