புரோ கபடி | தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யுபி யோத்தாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் புள்ளிகளை சேகரிக்க தொடங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 35-40 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 7இல் வென்று தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 3வது இடத்திலும், 11 ஆட்டங்களில் 4இல் மட்டுமே வெற்றி பெற்ற யுபி யோத்தாஸ் 9வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளினர்.

ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். முடிவில் 33-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸை பெங்களூரு புல்ஸ் அணி வீழ்த்தியது. 12 ஆட்டங்களில் 6இல் வெற்றி பெற்ற பெங்களூரு புல்ஸ் பாயிண்ட்ஸ் டேபிளில் 5வது இடத்திலும், 12இல் 5இல் வென்ற தமிழ் தலைவர்ஸ் 8வது இடத்திலும் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.