அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அக்னி கோன், குளோபல் ஸ்பேஸ் நிறுவனங்களின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ இன்று ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓராண்டுக்கும் மேலாக ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஸ்கைரூட் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. வெவ்வேறு எடைகளைச் சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்கள் வடிவமைக்கப்பட்டன. அவற்றுக்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையும் மறைந்த விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாயின் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது.
இன்று விண்ணில் செலுத்தப்பட்ட ’விக்ரம் எஸ்’ ராக்கெட், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா மற்றும் பாஸூம்க் ஆர்மீனியா ஆகிய மூன்று பேலோடுகளை சுமந்து சென்றது. 2.5 கிலோ எடையுள்ள சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான Spacekidz உருவாக்கியுள்ள ‘Fun-Sat’ செயற்கைக்கோளும் இதில் ஒன்று. இந்தியாவின் முதல் கார்பன்-ஃபைபர்-கட்டமைக்கப்பட்ட திட எரிபொருள் எஞ்சின் மூலம் இயக்கப்படும் விக்ரம்-எஸ், நவம்பர் 15ஆம் தேதி செலுத்தப்பட இருந்தது. மோசமான வானிலை காரணமாக மாற்றி அமைக்கப்பட்டு இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
’விக்ரம் எஸ்’ ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்களும் சேர்த்து அனுப்பப்பட்டன. அவை புவி மேற்பரப்பிலிருந்து 120 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. தொடர்ந்து பல்வேறு தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்களை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்திய பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மத்திய இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் மற்றும் இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் , ஸ்கை ரூட் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா, நாகா பரத் டாக்கா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய மத்திய அமைச்சர், ”இன்று இது ஒரு புதிய தொடக்கம். இது இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். ககன்யான் விண்கலம் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்த விக்ரம் ராக்கெட், வருங்காலங்களில் அதிகப்படியான விண்கலங்களை சுமந்து செல்ல உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த புது முயற்சிகளை எடுக்கவே, இது போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். புதுமையும், பாரம்பரியமும் சேர்ந்து வேகத்துடன் செயல்படுவதை வரவேற்கிறோம். அதிகப்படியான திறமைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. தொடர்ந்து 4 முதல் 6 வாரங்களுக்குள் அக்னி கோன், குளோபல் ஸ்பேஸ் நிறுவனங்களின் செயற்கைக்கோள்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்றார்.
இறுதியாக பேசிய ஸ்கை ரூட் இணை நிறுவனர் பவன் குமார் சந்த், “இந்தியா அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த செயல் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு இஸ்ரோ பெரிதும் உதவியாக இருந்தது. தனியார் ராக்கெட்டை ஏவுவது முடியாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் இன்று சாதித்து காட்டி இருக்கிறோம். முதல் நாளில் இருந்து இஸ்ரோவும், சோம்நாத்தும் பெரிதும் உதவி புரிந்தனர். அடுத்த ஆண்டு ’விக்ரம் 1’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.